search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரும்பு தாது"

    வெள்ளகோவில் அருகே இரும்பு தாது எடுக்கும் பணியை தொடர்ந்தால் போராட்டம் நடத்த போவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள ஓலப்பாளையம், பூசாரி வலசு, மொட்டகாடு, திருமண்காடு உள்ளிட்ட 17 கிராமங்களில் கனிம வளத்துறையை சேர்ந்த கியாசில் என்ற தனியார் நிறுவனம் இரும்பு தாது எடுக்க முடிவு செய்துள்ளது. இதற்காக 100 சதுர கிலோ மீட்டர் பரப்பு நிலத்தை கையகப்படுத்த உள்ளது.

    இந்த நிறுவனம் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் தகவல் தெரிவிக்காமல் ஆய்வு செய்துவிட்டது. தற்போது ஆழ்குழாய் கிணறு அமைக்க முடிவு செய்துள்ளது.

    வருகிற டிசம்பர் 6-ந் தேதி முழு பணியை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    இந்த திட்டத்தால் 1000 அடி முதல் 3000 அடி ஆழம் வரை ஆழ்குழாய் கிணறு அமைக்கப்படும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும். மேலும் பிரதான விவசாயமான பவானி - ஆழியாறு பாசனம், லோயர் பவானி பாசன திட்டம் பாழ்படும் என விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த திட்டத்தால் வெள்ளகோவில் டவுன், உப்பு பாளையம், குமரவலசு, முத்துகுமார் நகர், திருமங்கலம், வேலகவுண்டன் பாளையம், கல்லாங்காடடு வலசு, திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரம் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்.

    மேட்டுப்பாளையம் கிராமத்தில் 7500 பொதுமக்கள் பாதிக்கபடுவார்கள். இதுமட்டுமின்றி பல ஆயிரம் விசைத்தறி கூடங்கள், தேங்காய் பருப்பு உலர் கலம், கறி கோழி பண்ணை, நூற்றுக்கும் மேற்பட்ட நூற்பாலைகள், ஆயில் மில்கள், செங்கல் சூளைகள் பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி இதில் வேலை செய்யும், வெளியூர், வெளிமாநில தொழிலாளர்கள் 50 ஆயிரம் பேர் என மொத்தம் 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் மற்றும் விவசாயிகள், கால்நடைகள், கூலி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என குற்றம் சாட்டி உள்ளனர்.

    இரும்பு தாது எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் நிலத்தடி நீர் அடி பாதாளத்திற்கு சென்று விடும். இதனால் இத் திட்டத்தை கைவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக மேட்டுப்பாளையம், பச்சா பாளையம் , வீர சோழபுரம் கிராம மக்கள் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் உள்ள புவியியல் மற்றும் சுரங்க ஆணையர், திருப்பூர் கலெக்டர், தாராபுரம் கோட்டாட்சியர், காங்கயம் தாசில் தார் ஆகியோருக்கு மனு அனுப்பி உள்ளனர்.

    இரும்பு தாது எடுக்கும் பணியை தொடர்ந்தால் போராட்டம் நடத்த போவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    ×